Saturday, October 31, 2009

நானும் தீபாவளியும்...




நண்பர் இளைய பல்லவன்(ர்), பட்டய கணக்கர், காஞ்சித்தலைவன் அவர்கள் ஒரு தொடர் இடுகைக்கு அழைத்துள்ளார், நம்மளையும் நம்பி இந்த உலகம் தொடர் இடுகைக்கு அழைப்பதால், அதை மறுக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த தொடர் இடுகை..

எல்லா கேள்விகளுக்கும் அளிக்கப்பட்டுள்ள பதில்கள் உண்மை, உண்மையைத் தவிர வேறு இல்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்ள ஆசைப் படுகின்றேன். இந்த பதிவை தங்கமணி அவர்களும் படிப்பதால், உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.


1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு ?

என்னைப் பற்றி முக்கியமாக சொல்ல ஒன்றுமே இல்லீங்க. 44 வயசு. 1992 ல் திருமணம். அரவிந்த் என்று ஒரே ஒரு மகன். இந்தியாவில், ஹோசூர், பாண்டிச்சேரி, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, லக்னோ, சென்னை என்று பல ஊர்களில் வேலை. வெளி நாட்டில் சைனா, கத்தார், தற்போது நைஜிரியாவில் கணக்குப் பிரிவு, மேலாளர் மற்றும் அட்மின் பிரிவின் உதவி மேலாளராகவும் இருக்கின்றேன். (சிறு குறிப்பு என்று கேட்டதால் இவ்வளவுதாங்க..)

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் ?

சிறு வயதில் வெடிக்காக தந்தையிடம் கெஞ்சியதுதான் இன்றும் ஞாபகத்து வருகின்றது. ரூ. 10 வெடிக்காக அவரிடம் கெஞ்சாத கெஞ்சல் கிடையாது. இன்று பணம் இருக்கின்றது, ஆனால் வெடி வெடிக்கும் ஆசைத்தான் போய்விட்டது. அக்காவின் தலை தீபாவளிக்கு அவர்கள் வாங்கி வந்த வெடிகள் மறக்க முடியாத தீபாவளிதாங்க. அப்போது கிருஷ்ணர் வெடி என்று ஒன்று உண்டு. அதில் ஒரு வெடி வெடிக்கவில்லை என்று கையில் எடுத்து, அப்போது அது வெடித்துவிட்டது. நல்ல வேலையாக கையில் காயம் எதுவும் படவில்லை. ஆனால் அப்பா அடிச்ச அடியில் முதுகு பழுத்துவிட்டது.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

நைஜிரியாவின் தலைநகர் அபுஜாவில்தாங்க.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ?

இங்கு இந்தியர்கள் தங்களுக்குள் வீட்டிலேயே கொண்டாடும் தீபாவளிதாங்க. வெடி வெடிக்க இயலாது. கெய்சர் சுடு தண்ணி குளியல், சாமி கும்பிடுதல், புதுத் துணி போட்டுகிட்டு அலுவலகத்திற்கு போயாச்சு.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்க‌ளா ?

ஜூலை மாசம் இந்தியா போயிருந்த போது, குளோபசில் புதுத்துணிகள் வாங்கி வந்ததுதாங்க. என்ன ஒரு கஷ்டம், சைஸ் 34 என்று கொடுத்தார்கள். போட்டுப் பார்த்தால் ரொம்ப லூஸ் ஆகியிருக்கு. நான் இளைச்சு போயிட்டேனா, இல்ல சைஸ் 34 போட்டு பெரிய சைஸ் கொடுத்துட்டாங்களான்னு பார்க்கணும்.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் ? அல்ல‌து வாங்கினீர்க‌ள் ?

மிக்சரும், செவன் கேக், குளோப்ஜாமூன் எல்லாம் வீட்டில் செய்தார்கள்.

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

பலருக்கும் தொலைப் பேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா ? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா ?

அலுவலகம் போயாச்சுங்க. மாலை நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் அவர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கு பல நண்பர்கள் வந்து இருந்தனர். அவர்கள் கூட உணவு உண்டு சந்தோஷமாக பொழுது கழிந்தது. தொலைக் காட்சி என்றால் இங்கு ஜெயா டிவி, TBO, ஏசியா நெட், கைரளி என நான்கு டிவித்தான் தெரியும். சில ஹிந்தி சேனல்கள் உண்டு. அவ்வளவாக புரியாததால் பார்ப்பதில்லை. அலுவலகம் இருந்ததால் எந்த தொலைக்காட்சியும் பார்க்கவில்லை.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் ? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

விசேஷங்கள் அன்று உதவி என்று எதுவும் செய்வதில்லீங்க. எப்போது எல்லாம் முடிகின்றதோ, அப்போது உதவி செய்வேன். பல தனிப்பட்ட காரணங்களினால் எதுவும் கொடுக்க இயலாத நிலையில் இருக்கின்றேன்.

10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் ?

அண்ணன் வானம்பாடி அவர்கள் - இவரின் எழுத்துக்களுக்கு நான் அடிமை. அஷ்டாவதானி என்று இவரைச் சொல்லலாம். நான் அடிக்கும் கும்மிகளை சந்தோஷமாக ஏற்றுக் கொள்பவர் என்பது ஒரு காரணம்.

தம்பி நேசமித்ரன் - கவிதையின் புது பரிமாணத்தை எனக்கு உணர்த்தியவர். ஒரு சீரியசான இடுகையில் கும்மி அடிச்ச போதும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர். மேலும் பழக இனிமையானவர்.

சும்மா - பேருதான் சும்மா. வலைப்பூவில், தேனம்மை லஷ்மணன் அவர்களின் கவிதைகள் தேனில் தோய்த்து, சக்கரை பாகில் வடித்திருப்பார். காதலையும், பூக்களையும் இணைத்து கவிதையாக வடித்திருப்பார். அருமையான கவிதைகள்.

ராகவன் - வலைப்பதிவில் சமீபகாலமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். அழகான கவிதைகள். நெஞ்சைத் தொடுக் கவிதைகள். இவரின் இன்றைய பிள்ளைக்கலி கவிதை நெஞ்சைத் தொடுகின்றது. இவரையும் இந்த தொடர் இடுகை எழுத அழைக்கின்றேன். எங்க இருவருக்கும் பெயர் பொருத்தம் மட்டும் தாங்க. அண்ணன் கவிஞர். கவி மழைப் பொழிகின்றார். இவரின் மற்றொரு கவிதை குரல் குடித்தனம். படித்துப் பாருங்க அவரின் பெருமை புரிய வைக்கின்ற மற்றொரு கவிதை.

இன்னும் சிலரை அழைக்க ஆசையாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் நாமே எல்லோரையும் அழைத்து விட்டால், மற்றவர்களுக்கும் ஆள் கிடைக்க வேண்டுமே என்ற காரணத்தினால், இதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன்.

Tuesday, October 27, 2009

படங்கள்


நானும் வலையுலகத்தில் என் இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. அதற்காக சில படங்கள்..



இந்தப் பாலத்தை படம் பிடித்த காரணம்... REBUILT 1937 - 72 வருட பழமையான பாலம்...



தண்ணீரும், அருவிகளும் என்றுமே அழகு. இந்த சிறு அருவியைப் பார்க்கும் போது ஐயா மா. நன்னன் அவர்கள் நினைவுக்கு வந்தார். அருவி என அழகான சொல் இருக்க நீர்வீழ்ச்சி என பலரும் சொல்லுகின்றனர் என்பார். Waterfalls என்பதை தமிழ் படுத்திவிட்டனர் என்றும் சொல்லுவார்.



குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் வழி. நன்றாக பராமரித்து கொண்டு இருக்கின்றார்கள் என நினைக்கத் தோன்றிய இடம்.



குன்னூரில் ஒரு தேயிலைத் தோட்டம்... (தோட்டம் என்பது சரியா?)


என்ன கோபமோ தெரியவில்லை... முகத்தை காட்ட மறுக்கின்றார்.


பொதிகை மலைத் தென்றலில் தவழ்ந்து வரும்... என்ற பாட்டு ஞாபகத்து வரவில்லை?



தாயன்புக்கு ஈடு இணை உண்டோ?



குன்னூர் செல்லும் வழியில் சும்மா கிளிக்கியது. இயற்கை என்றுமே அதிசயம்தான்.



கோவை - பொள்ளாச்சி சாலை. சாலையின் அகலம் குறைவாக இருந்தாலும் நன்றாக பராமரிக்கப் பட்டு இருக்கின்றது.




தென்னந்தோப்பு... அழகு .. கோவை - பொள்ளாச்சி சாலையில் எடுக்கப்பட்டது.


மேலும் படங்கள் ... உண்டு என நினைக்கின்றேன்....

Sunday, October 25, 2009

பாசப் பறவைகள் பாகம் - 7 (Final)

திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு ஜூலை 6, 2009.

ஜூலை 6, 2009, குன்னூரில் இருந்து காலை 9 மணியளவில் கிளம்பி, திருச்சிக்கு ஈரோடு வழியாகத்தான் செல்வதாக இருந்தேன். எப்போதும் போல் வடகரை வேலன் அண்ணாச்சியை தொடர்பு கொண்டு வழியைக் கேட்டுக் கொண்டு பின் போகலாம் என்று, அவரை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டேன். அவர் திருப்பூர் வழியாக போங்க. ரோடு நல்லா இருக்கும். அப்படியே திருப்பூர் பதிவர்களையும் சந்திக்கலாம் என்றும் ஐடியா கொடுத்தார். வடகரை வேலன் அண்ணாச்சிக்கு நன்றி. சொன்னதோடு மட்டுமல்லாமல், பரிசல் காரன், வெயிலான் இருவரது தொலைப்பேசி எண்களையும் கொடுத்து அவர்களுக்கும் என் வருகையைப் பற்றி தகவலும் தெரிவித்தார்.

ஓவர் டு தெ டெலிகான் வித் பரிசல் அண்ட் வெயிலான்.

அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களிடம் தொலைப்பேசி எண் கிடைத்ததும், முதலில் அழைத்தது நண்பர் பரிசல் காரன் அவர்களைத்தான். அவர் அவசியம் வாங்க, பார்க்கலாம் என்றுச் சொன்னார்.

அடுத்து நண்பர் வெயிலான் அவர்களை அழைத்தேன். அண்ணே, திருப்பூர் அருகில் வந்தவுடன் அழையுங்கள். வழிச் சொல்லுகின்றேன் என்றுச் சொன்னார்.

சென்னையில் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பர்ச்சேஸ் மேனேஜராக வேலை செய்த போது, பல தடவை திருப்பூர் சென்று இருக்கின்றேன். அப்போதெல்லாம், கோவையில் தங்குவேன். அங்கிருந்து கம்பெனி பி.ஆர்.ஓ நான் போக வேண்டிய இடத்திற்கு காரில் அழைத்துச் சென்று திரும்பி கொண்டுவந்து விடுவார். அதனால் வழிப்பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதில்லை.

திருப்பூரில், ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கின்றன. டையிங், வாஷிங், பிரிண்டிங், எம்பிராடய்ரி எல்லாம் சென்னையை விட மலிவாக கிடைக்கும். சென்னையில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் திருப்பூரை நாடுவதற்கு காரணம் இதுதான் என நினைக்கின்றேன். மேலும் தெரிந்தவர்கள் விவரமாக தெரிவிக்கவும்.

மதியம் 12 மணியளவில் திருப்பூரை நெருங்கியபின், நண்பர் வெயிலானை அழைத்தேன். அண்ணே எங்க இருக்கீங்க என்று கேட்டார். எப்போதும் போல் நான் வரும் வழியை சொல்லி அவரைக் குழப்பினேன். பின்னர் ரயில் நிலையம் செல்லும் வழி என்றுப் போட்டு இருக்கு அப்படின்னு சொன்னேன். அண்ணே நேரா வாங்க, உங்க வண்டி நம்பர் என்ன வென்றுச் சொல்லுங்க என்றுச் சொன்னார். நம்ப வண்டி நம்பரையும், கலரையும் சொன்னேன். ரயில் நிலையம் அருகில் வரும்போது, நண்பர் வெயிலான் தொலை பேசியில் அழைத்து அண்ணே உங்க வண்டியைப் பார்த்துட்டேன், அப்படியே ஓரம் கட்டுங்க என்றுச் சொன்னார்.

அவரும் அவருடைய நண்பர் தேவராஜனும் எங்களை அழைக்க வந்திருந்தனர்.

பின்னர் மதியச் சாப்பாட்டுக்கு எங்கு போவது என்று பலரை கூப்பிட்டு கேட்டு, அரோமா ஹோட்டலுக்கும் கூப்பிட்டுக் கொண்டு சென்றார்.

அங்கு சென்ற பின் நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், இராமன் குட்டி மூவரும் வந்தனர்.

பரிசல் அவர்களுக்கு வேலைப் பளு கூடுதலாக இருப்பதால், எங்களை உணவருந்த ஆரம்பிக்குமாறும், பின்னர் அவர் வந்து சேர்ந்துக் கொள்வதாகவும் சொன்னார்.

நாங்க சாப்பிட்டு முடிச்ச பின்பும் பரிசல் அவர்கள் வர தாமதமானது. அன்று ஒரு ஷிப்பிங் இருப்பதால், குவாலிட்டி செக்கிங் போய் கொண்டு இருப்பதாகவும், அதனால் தான் தாமதம் என்றும் சொன்னார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதிக் கம்பெனிகளில், ஷிப்பிங் இருக்கும் போது, அங்கு வரும் குவாலிட்டி செக்கர்கள் என்ன பாடு படுத்துவார்கள் என எனக்கு நன்றாகவேத் தெரியும். எல்லாம் அனுபவம் தான். அது சரியில்லை, இது நொள்ளை, நொட்டை எல்லாம் சொல்லிகிட்டு திரிவாங்க. அவங்கதான் உலகத்திலேயே ரொம்ப பர்ஃபெக்ட் என்ற எண்ணத்துடன்.

அங்கிருந்து கிளம்பும் போது பரிசல் அவர்களும் நிறைய நேரம் அளவாவ முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. தொலைப்பேசியில் உரையாடும் போதும் அவருக்கும் அந்த வருத்தம் இருந்ததை உணர முடிந்தது.


வரும் போதே, அண்ணே இவங்க சொன்னது எதையும் நம்பாதீங்க அப்படின்னு சொல்லிகிட்டே வந்தார். என்ன செய்வது எல்லோரும் அவரை வல்லவர், நல்லவர் என்று சொல்லியிருந்தனர். சரிங்க என்று பொத்தம் பொதுவாய் சொல்லி வைத்தேன்.

பின்னர் அங்கு அரோமா ஹோட்டல் வாசலில் கிட்டதட்ட 30 நிமிடம் பேசிக் கொண்டு இருந்து விட்டு, திருப்பூரில் சில டி-சர்ட் வாங்க வேண்டும் என்றுச் சொன்னேன்.

பரிசல் அவர்கள் வருவதற்கு முன் நாங்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டோம். பின்னர் ஒரு வழியாக பரிசல் அவர்கள் கம்பெனியில் எதோ சொல்லிவிட்டு, அவசரம் அவசரமாக வந்துச் சேர்ந்தார்.
நண்பர் வெயிலானும், தேவராஜன் அவர்களும் கூடவே வந்து இருந்து, எல்லாம் வாங்கிக் கொடுத்தனர். அரவிந்திற்கு ஒரு சட்டை வாங்கி பிரசண்ட் செய்தனர்.

திருப்பூர் பதிவர்கள் சந்திப்பு, மிகச் சிறிய நேரம் என்றாலும், மிக அழகாக அமைந்தது.

மிக்க நன்றி திருப்பூர் நண்பர்களே.

சில படங்கள் தங்கள் பார்வைக்காக.


நண்பர்கள் ஈர வெங்காயம், நாடோடி இலக்கியன், பரிசல்காரன், வெயிலான், நான், இராமன் குட்டி (இவர் இன்னும் ப்ளாக் ஆரம்பிக்க வில்லை).



மேலுல்ல வரிசையில் பரிசல்காரன் அருகில் அமர்ந்திருப்பவர், வெயிலான் அவர்களின் நண்பர் தேவராஜன்.

பின் திருப்பூரில் இருந்து சுமார் 4.30 மணியளவில் கிளம்பி, கரூர் வழியாக திருச்சியை அடைந்த போது, இரவு மணி 8.30. கரூர் திருச்சி சாலை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ் நாட்டில் நான் பயணப்பட்ட இடங்களிலே, இதுதான் மிக மட்டமான சாலையாக இருந்தது.

பல பதிவர்களையும் சந்திக்க ஆசைத்தான். முக்கியமாக அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களுடன் தொலைப் பேசியில் உரையாடினேன். நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. அடுத்த முறை இந்தியா செல்லும் போது சந்திக்க வேண்டும். அதிஷா, லக்கிலுக் இவர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாட வேண்டும் என எண்ணியிருந்தேன். அதுவும் என்னுடைய பல தனிப்பட்ட வேலைகளால் தடைப்பட்டுவிட்டது.

இந்திய பயணத்தில் வலைப்பதிவர்கள் பலரையும் பல இடங்களில் சந்தித்து, அவர்களுடன் அளவாவியது, அவர்கள் காண்பித்த கள்ளமில்லா அன்பு என்னை மிகவும் நெகிழவைத்தது என்னவோ நிஜம்.

இந்தியவில் இருந்து திரும்பிய பின், நைஜிரியாவின் பிரபல, பேமஸ், சூப்பர் பதிவர், என் ரத்ததின் ரத்தம், உடன்பிறவா சகோதரர், உடன் பிறப்பு, என்னை வலையுலகில் இழுத்துவிட்டு, தான் மட்டும் காணமல் போன அணிமா தம்பியுடன் சந்திப்பு மிக கோலாகலமாக நடந்தது. இந்தியப் பிரயாணம் பற்றி தம்பி விஜாரித்தார். எல்லாம் நல்ல படியாக முடிந்து திரும்பி வந்ததுப் பற்றி சந்தோஷப்பட்டார். கிட்டதட்ட 3 மணி நேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

இப்படியாக என்னுடைய பாசப் பறைவகள் பற்றிய தொடர் இடுகை இத்துடன் முடிந்தது.

அன்பு காண்பித்த பதிவர்கள் அனைவருக்கும் வணக்கங்களும், நன்றிகளும் பல.

இதுவரை இந்த தொடர் இடுகையைப் படித்து, பின்னூட்டமிட்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
என்றென்றும் அன்புடன்

இராகவன், நைஜிரியா.

Saturday, October 10, 2009

படங்கள்

இந்த தடவை இந்தியா வந்திருந்த போது, இரண்டு நாட்கள் குன்னூரில் தங்கியிருந்தேன். அப்போது எடுத்த படங்கள் உங்கள் பார்வைக்கு.

நாங்களும் படம் காட்டுவோமில்ல..


ரோஜாவில் இரண்டு கலர் ரோஜா... ரொம்ப பிடித்து எடுத்தப் படம்..
பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினை மறந்தேனோ ....



குன்னூர் சிம்ஸ் பூங்காவினில் இருக்கும் பூ.. அதன் இதழ்களின் கவர்ச்சியில் மயங்கி எடுத்தப் படம்.



சிம்ஸ் பூங்கா வாசலில் சோளம் விற்றுக் கொண்டு இருந்த நண்பர்.. ராஜ பாளையத்தைச் சேர்ந்தவர். இவர் வியாபாரத்தைப் பற்றிச் சொல்லும் போது, மக்கள் எவ்வளவோ செலவு செய்வார்கள், ஆனால் எங்களைப் போன்றவர்களிடம் தான் அதிகமாக பேரம் பேசுகின்றனர் என்றார். அவர் விற்கும் சோளம், ஹை ப்ரீட் வகையைச் சேர்ந்தது என்றும், ஒரு வாரத்தில் அனைத்தும் விற்றுவிட வேண்டும் என்றும், அப்படி விற்காமல் போனால் அது அனைத்தும் நஷ்டம் என்றும் கூறினார். அவரிடம் பேரம் சொல்வதை நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கின்றது.



சிம்ஸ் பூங்கா ஒரு கண்ணோட்டம் - அறிவிப்புப் பலகை.



சிம்ஸ் பூங்கா வாயில் இருக்கும் அழகாகச் செதுக்கப் பட்ட புல்வெளி.



சிம்ஸ் பூங்காவினில் இருந்த பூ - பெயர் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.



சிம்ஸ் பூங்காவில் தான் இந்தப் பூவையும் படம் பிடித்தேன்... பெயர் தெரியவில்லை.


நாங்கள் தங்கியிருந்த குன்னூர் கிளப்.



குன்னூர் கிளப்பின் மற்றொருத் தோற்றம்.



பூக்களின் ராஜா - ரோஜா



இந்த ரோசாவின் கலர் - என்ன சொல்வதென்றுத் தெரியவில்லை



குன்னூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்த தோட்டத்தில் எடுக்கப் பட்ட படம் - பூவின் பெயர் தெரியவில்லை - தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.




குன்னூர் செல்லும் வழியில் உள்ள பாலம். அதன் அழகு பிடித்து இருந்ததால் எடுத்தப் படம்.

இந்தப் படங்களைப் பற்றி உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன். மேலும் படம் போடலாங்க.