Wednesday, December 23, 2009

என்னா...........................வலி. முடியலை

எனக்கு வந்த மாதிரி யாருக்குமே வரக்கூடாதுங்க... என்ன செய்வது வந்துடுச்சு.. நாமதானே அனுபவிக்கணும்... என்னாச்சுன்னு கேட்கறீங்களா... படிச்சுப் பாருங்க புரியும் உங்களுக்கே...

அக்டோபர் மாசத்தில ஆரம்பிச்சுதுங்க... பயங்கர ஜலதோஷம்... சென்னைத் செந்தமிழில் சொல்லணும் என்றால், சரியான ஜல்ப்பு பிடிச்சுகிச்சு நைனா.

நானும் மருத்துவர்கிட்ட போகாம நமக்கு தெரிஞ்ச மாத்திரை எல்லாம் உபயோகப் படுத்திப் பார்த்தேன். சில நண்பர்களுக்குடன் பேசும் போது, அண்ணே நல்ல பிராண்டி வாங்கி மிளகு போட்டு அடிச்சுப் பாருங்க சரியாகிடும் என்ற யோசனை வேறு சொன்னார்கள். நம்ம உடம்பு பத்தி நல்லாத் தெரியும் என்பதால் அதை முயற்சி செய்யவில்லை.

இப்படி ஒரு 15 நாள் ஓட்டிட்டேன். இதுக்கு மேலே போச்சுன்னா ரொம்ப கஷ்டம் அப்படின்னுட்டு, இங்கு ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். அய்யா 15 நாளா ஜலதோஷம் பிடிச்சுக்கினு ரொம்ப படுத்துது. மூக்கு அடைச்சுக்கினு மூச்சு விட சிரமமா இருக்குது, மூக்கிலே இருந்து தண்ணியா கொட்டுது, இருமல் வேற ஜாஸ்தியா இருக்குன்னு சொன்னேன்.

அதுக்கென்னங்க நிறுத்திடலாம் அப்படின்னு சொன்னாரு. (ஜலதோஷத்தை என்றுதான் அர்த்தம் பண்ணிக்கணும்... மூச்சு விடறத இல்ல).

நான் அவர்கிட்ட அய்யா நமக்கு பென்சிலின், சல்பர் டிரக்ஸ், கொனைய்ன் (அப்படித்தான் நான் படிச்சேன்... மருத்துவர்கள் மன்னிக்க தப்பா இருந்தால்) இதெல்லாம் நமக்கு அலர்ஜி. உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொன்னேன். சரி அப்படின்னுட்டு மாத்திரை கொடுத்தாரு.

மாத்திரை எல்லாம் சாப்பாடு சாப்பிட்டபின் சாப்பிடுங்கன்னு சொன்னாரு. நானும் சரின்னு சொல்லிட்டு, மதிய உணவுக்கு பின் சாப்பிட்டேன். அதுல பாருங்க ஒரு மாத்திரை (பேர் தெரியலை) நமக்கு அலர்ஜியாடுச்சுப் போல் இருக்கு. இரண்டு மணி நேரத்தில் உதடு தடிச்சு போச்சு, கையில் நாலஞ்சு இடத்தில் ஒரு மச்சம் மாதிரி வந்திடுச்சு. அய்யய்யோ என்னாடா இது வம்பு அப்படின்னு திரும்பவும் டாக்டரிடம் ஓடினேன். அவர் பார்த்துட்டு அய்யய்யோ அப்படின்னுட்டு, அவர் கொடுத்த மாத்திரையில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்துட்டு, வேற மாத்திரை கொடுத்தாரு. மேலும் அலர்ஜி சரியாவதற்கு மாத்திரைக் கொடுத்தார்.

அவர் அலர்ஜிக்கும், ஜலதோஷத்துக்கும் கொடுத்த மாத்திரையில் அலர்ஜியும், ஜலதோஷமும் சரியாச்சு. ஆனால் வயத்து வலியில் கொண்டு விட்டுடுச்சு. எதைச் சாப்பிட்டாலும் உடனே வயத்து வலி, வயத்துல ஒரு எரிச்சல் தாங்க முடியல.

என்னடாது வம்பாப் போச்சேன்னு, திரும்பவும் டாக்டரிடம் போனேன். அவர் இது மாத்திரை நிறையச் சாப்பிட்டதால் அல்சர் ஆயிருக்கு. அத சரி பண்ண மாத்திரை கொடுக்கின்றேன் என்றுக் கொடுத்தார்.

அந்த மாத்திரைச் சாப்பிட்டா, அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பயங்கர தலைவலி, தலைச் சுத்தல் தாங்க முடியல. கொடுமையடா சரவணா இதெல்லாம் நமக்குச் சரி வராது. இந்த வயத்து வலியை முதல்ல கட்டுப் படுத்தணும். அதுக்கு ஒரே வழி நம்ம சாப்பாட்டில் காரம் இல்லாமல், சாப்பிடுவது என்று முடிவு செய்து 10 நாளைக்கு வெறும் மோர் சாதம், ப்ரெட் இப்படி சாப்பிட்டு, ஊரில் இருந்து கொண்டுவந்த பாண்டாசிட் மாத்திரையைய்ப் போட்டு கிட்டு ஒரு மாதிரி இப்பத்தான் சரியாயிருக்கு.

தலைவலி போய் திருகு வலி வந்தமாதிரின்னு சொல்லுவாங்க கேள்விப் பட்டு இருக்கேன். ஆனா இப்பத்தான் அனுபவச்சேன்.

இதெல்லாம் விட கொடுமை என்னன்னா நம்ம தம்பி நவாஸ் கூட சாட்டில் பேசும் போது அவரை கலாய்ச்சதுதான். நீங்களே படிச்சுப் பாருங்களேன்... தம்பி பயங்கர டென்ஷன் ஆயிட்டாரு...

நவாஸ் : அண்ணே எப்படி இருக்கீங்க

நான் : என் நிலைமை எப்படி இருக்குத் தெரியுமா
ஜலதோஷம் வந்து மூக்கு அடைச்சு கிச்சு
சரி என்று டாக்டரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிட்டால்
அது அலர்ஜியா ஆயிடுச்சு
திரும்பவும் டாக்டரிடம் ஓடினா அவர் பயந்து போய்
அலர்ஜிக்கு மருந்து கொடுத்தா
அது வயத்து வலியில் கொண்டு விட்டுவிட்டது
சரின்னு இப்ப அதுக்கு மருந்து சாப்பிட்டா
அது தலைவலியில் கொண்டு விடுது

நவாஸ் : ஹா ஹா ஹா ஹா.

நான் : என்ன பண்றதுன்னு நீங்க சொல்லுங்க பார்க்கலாம், உண்மைங்க இது

நவாஸ் : நம்ம டாக்டர் தேவன்மாயம் கிட்டா போனீங்களா

நான் : அய்யா நான் இருப்பது நைஜிரியா, அவர் இருப்பது காரைக் குடி இந்தியாவில்

நவாஸ் : என்னண்ணா இது சின்னப்புள்ளைங்க உடம்பு மாதிரி ஆயிடுச்சு உங்களுக்கு. அப்போ கைமருந்துதான் சரிவரும் உங்களுக்கு

நான் : எல்லா மருந்துகளையும் கைல எடுத்து சாப்பிடுகின்றேன்

நவாஸ் : அதாவது நாட்டுமருந்து

நான் : எந்த நாட்டு மருந்து அப்படின்னு சொல்லுங்க

நவாஸ் : அண்ணாஆஆஅ, பாட்டிவைத்தியம்

நான் : எங்க பாட்டி எப்பவோ செத்துப் போயிட்டாங்களே

நவாஸ் : அய்யய்ய்யோஓஒ யாராவது வாங்களேன்

நான் : எதுக்கு. அன்ண்னனுக்கு வைத்தியம் பார்க்கவா

நவாஸ் : எங்க அண்ணனுக்கு மருந்து கொடுக்கத்தான்

நான் : அது சரி. தாங்க முடியலடா சாமின்னு அங்க கத்துவது இங்கு கேட்குது

நவாஸ் : ஹா ஹா ஹா ஹா. இப்போ எப்படி இருக்கு உடம்பு. தலைவலிக்கு கடைசியா மருந்து சாப்ட்டீங்களா

நான் : இல்ல சாப்பிடவில்லை. வயத்து வலிக்கு மட்டும் கொஞ்சமா மருந்து

நவாஸ் : அதுக்கு புதுசா வர வேற எது வலி இருக்குறமதிரி தெரியலை. அதான் எல்ல வலியும் வந்திடுச்சே


ஆனா பாருங்க அன்னிக்கு இப்படி பாதியிலேயே கட் பண்ணிட்டுப் போனவருத்தான் இன்னி வரைக்கு சாட் பக்கமே வரவில்லை. நான் எதாவது தப்பா பேசிட்டேனாங்க... அவருக்கு என் மேல் என்ன கோபம் அப்படின்னு யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்.

Monday, December 21, 2009

நாட் குறிப்பு புத்தகம்.





எனக்கு ஒரு விபரீத ஆசை உண்டாச்சுங்க... என்ன அப்படின்னு கேட்கறீங்களா..

புது வருஷம் வந்துச்சுன்னா பலருக்கும் வரும் ஆசைதாங்க எனக்கும் வந்துச்சு...

ஆசையை அடக்க முடியலை..

நிறைய பேர்கிட்ட பார்ர்கும் போது, வழ வழன்னு கலர் கலரா, வித விதமான அளவுகளில் பார்க்கும் போது எனக்கு ஆசையா இருந்திடுச்சுங்க..

எப்படியாவது ஒரு நாட்குறிப்பு புத்தகம் (டைரி? / டயரி?) வாங்கி தினமும் எழுத ஆரம்பிக்கணும் அப்படின்னு...

ஒரு சுபயோக சுப தினத்தில் நானும் டைரி வாங்கலாம் அப்படின்னு நினைச்சுகிட்டு கடைக்குப் போனா, அங்க வித விதமா வச்சு இருந்தாங்க. வழ வழன்னு அட்டை போட்டு சூப்பரா வச்சு இருந்தாங்க. நாமதான் ரொம்ப சுறு சுறுப்பாச்சுங்களா, ஒவ்வொன்னா பாக்கும் போது, இத வாங்கலாம், அதவாங்கலாம் அப்படின்னு நினைச்சு எதையும் வாங்காம விலையை மாத்திரம் பார்த்துட்டு (விலையைக் கேட்டு டரியல் ஆகி !!) திரும்பியாச்சு.

மறு நாள் நம்ம மேனேஜர் கூப்பிட்டு, ராகவா இத வச்சுக்க அப்படின்னு ஒரு பெரிய டைரி ஒன்னு கொடுத்தாருங்க. அத பார்த்தவுடனே நமக்கு பெருமை பிடிபடல. வாங்கி மேலட்டையைத் தடவிப் பார்க்கிறது, ஒவ்வொரு பக்கமா திருப்பிப் பார்க்கின்றதும் அப்படி ஒரு சந்தோஷம். குழந்தையை அப்பா மிட்டாய் கடைக்கு அழைச்சுக்கிட்டு போன மாதிரி ஒரு சந்தோஷம். ஒரு வருஷம் கழிச்சு இதை படிச்சுப் பார்த்தா எவ்வளவு விசயம் எழுதியிருப்போம் அப்படின்னு ஒரு எண்ணம்.

பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் சுயசரிதம் எழுதும் போது, இது மாதிரிதான் தங்களுடைய டைரியை வச்சு ரெபரன்ஸ் பார்த்து எழுதுவாங்க போல. நாமளும் பின்னாளில் பெரிய ஆளா (நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குது !!!) வரும் போது இது ரொம்ப உபயோகப் படும், சுய சரிதம் எழுதுவது மாதிரி கனவு வேற. புது வருஷம் பிறக்கும் வரை இப்படி வித விதமா கனவு கண்டுகிட்டே இருந்தேன்.

புது வருஷமும் வந்தது.. கார்த்தால எழுந்தவுடனே பல் தேய்ச்சு, தங்க மணி கொடுத்த காப்பியைக் கூட குடிக்காமல், டைரியை எடுத்து வச்சுகிட்டு எழுத உட்கார்ந்தாச்சு.

என்ன எழுதுவது. சரி முதலில் நம்ம பேர், அட்ரஸ், பிறந்த தேதி, தங்கமணிகிட்ட மாட்டிகிட்ட தேதி, லொட்டு, லொடஸ்க்கு எல்லாம் கேட்டு இருக்காங்களே அதை நிரப்பலாம் என்று நினைத்து நிரப்பினேன்.

அதுல Pan நம்பர், டிரைவிங் லைசன்ஸ் நம்பர் எல்லாம் கேட்டு இருந்தாங்க. நம்ம கிட்டத்தான் இரண்டுமே கிடையாதே, இருந்தாலும் வெறுமையா விட முடியுமா, அதனால ஒரு கோடு போட்டு வச்சேன். இந்த வருஷம் முடிவதற்குள் இரண்டும் வாங்கிவிட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு.

ஜனவரி 1 - எதாவது எழுத வேண்டுமே. சரி முதலில் பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுத ஆரம்பித்தேன். என்ன எழுதுவது என்றுப் புரியவில்லை. கொஞ்ச நேரம் மேலேப் பார்த்தேன். அப்புறம் கன்னத்தில் கை வச்சு கிட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தேன். விஷயம் ஒன்னும் தோணவேயில்லை. இங்க காப்பி ஆறிப் போகுது, அங்க உட்கார்ந்து காலங்கார்த்தால மோட்டுவளையை பார்த்து என்ன ஆகப் போகுதுன்னு தங்கமணி ஒரு சவுண்ட் விட்ட வுடனே, புது வருஷம் அதுவுமா டோஸ் வாங்க வேண்டாம் அப்படின்னு நினைச்சு, டைரி என்பதே அன்று நடந்த விஷயங்களை சாயங்காலம் இல்லாட்டி ராத்திரி உட்கார்ந்து எழுதணும் அப்படின்னுட்டு மூடி டிராயரில் பத்திரமா வச்சுட்டு வந்துட்டேன்.

அன்று புது வருஷம் என்பதால் நண்பர்கள் சிலர் வீட்டுக்கு வந்தனர். நான் சிலர் வீட்டுக்கு போனேன். எல்லாத்தையும் மனதில் குறித்துக் கொண்டேன். இதையெல்லாம் ஞாபகமாக டைரியில் எழுத வேண்டும் என்று. சாயங்காலம் இவை எல்லாவற்றையும் ஞாபகமாக குறித்துக் கொண்டேன். ஒரு 10 லைன் எழுதியிருந்தேன். பார்த்த போதே எனக்கே ஒரு சந்தோஷம். முதல் நாள் இவ்வளவுதான் எழுதமுடியும் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அடுத்த நாள் சிலரைச் சந்தித்ததுப் பற்றி எழுதினேன். 4 லைனுக்கு மேல் போகவில்லை.

மூன்றாம் நாளும் இது மாதிரி 4 வரி எழுதினேன். அப்ப தங்கமணி தினமும் ராத்திர் என்னமோ எழுதறீங்களே என்ன அப்படின்னு கேட்டாங்க. ஒன்னுமில்ல நாட் குறிப்பு புத்தகம் எழுதறேன் அப்படின்னேன். நீங்க எழுத்தாளார எப்ப மாறீனீங்க அப்படின்னு கேட்டாங்க. நான் சொல்வது புரியவில்லை என்றால் என்ன பேசறேன்னு கேட்கணும். சும்மா இப்படி எல்லாம் கேள்விக் கேட்கபிடாது அப்படின்னு கேட்கணும் நினைச்சு, ஒன்னுமில்லம்மா டைரி எழுதறேன் அப்படின்னு சொன்னதுக்கு, தமிழ்ல டைரின்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே, ஏன் இப்படி பயமுறுத்தறீங்க(?) அப்படின்னு முகவாயில ஒரு இடி இடிச்சுட்டு போன்னாங்க.

அதுக்கு அப்புறம் பிப்ரவி 1 அன்றுதான் டைரி பற்றி நினைப்பு வந்தது. அடடா இத்தனை நாளும் எழுதாம போயிட்டோமேன்னு ஒரே வருத்தமா போயிடுச்சுங்க. என்ன செய்வது போனது போனதுதான். ஆனாலும் என்ன எழுதுவது என்றுத் தெரியவில்லை. சரி தினமும் என்ன செலவு செய்தோம் அப்படின்னு எழுதலாம் அப்படின்னு நினைக்கும் போதுதான்,இந்த வீட்டில் நான் செலவு எதுவும் செய்வது இல்லை என்ற ஞாபகம் வந்தது. அப்படி இப்படின்னு மூளையை (?) கசக்கி, அன்னிக்கு சந்தித்தவர்கள், அலுவலகத்தில் நடந்த விஷயங்கள், சிலருக்கு எழுதிய மெயில் எல்லாம் எழுதினேன்.

இப்படி அப்படின்னு தீடீரென நினைச்சு எழுதுவேன். அப்புறம் கொஞ்ச நாள் எழுத மாட்டேன். 3 மாசம் போச்சு. தங்கமணி, இந்த டைரியை வச்சுகிட்டு என்ன செய்யறீங்க. 3 மாசத்தில் அங்க அங்க எழுதியிருக்கீங்க அப்படின்னு கேட்டாங்க.

நானும் மத்தவங்க டைரியெல்லாம் படிப்பது ரொம்ப தப்புன்னு சொன்னதுக்கு, நான் உங்களில் பாதிதானே, அதனால படிச்சா தப்பு ஒன்னுமில்ல அப்படின்னு சொன்னாங்க. சொல்லிட்டு, எனக்கு வரவு செலவு கணக்கு எழுத நல்லதா ஒரு நோட்டு இல்ல. இதுல நீங்க ஒன்னும் எழுதுவதில்லையே எனக்கு கொடுங்க அப்படின்னு கேட்டாங்க. அப்பாடா இதுதான் சமயம் என்று, நானும் டயரியில் அதைத்தான் எழுதணும் என்று இருந்தேன். நீயே (நீங்களே?) சரியாச் சொல்லிட்டே. வச்சுக்கன்னு உடனே தூக்கிக் கொடுத்துட்டேன். அப்பாடா இந்த டைரி எழுதுவதில் இருந்து தப்பிச்சுட்டேன்.

அப்ப நினைச்சுகிட்டேன்.. இந்த டயரி எழுதுவது எவ்வளவு கஷ்டமான விசயம் என்று..

நீங்க என்ன நினைக்கிறீங்க

Tuesday, December 15, 2009

வலைப்பதிவர்கள் சந்திப்பு - 11-12-2009



ரொம்ப நாளாச்சு. .. அபுஜாவில் பதிவர் சந்திப்பை நடத்தி...

ஒரு பிரம்மாண்டமான பதிவர் சந்திப்பை நடத்தி விட மனது துடித்தது. உடனே தம்பி அணிமா (இன்னமும் பதிவர்தான்.. !!), நேசமித்ரன் இருவரையும் கூப்பிட்டுச் சொன்னபோது, தம்பி நேசன் கவிதை நடையில் பதில் தெரிவித்தார். அந்த கவிதை

ஆயிரம் கதவுகளுக்கு அப்பால்
ஆதவன் ஓளியும் விழியும் சமோவா (இராகவன்)
ரோங்கா (அணிமா) தீவுகளுக்கிடையே
கடக்கும் தேதிக் கோடு என்னைக் கழித்துச்சென்றது
ஆதலால் அண்ணே ஆகாதென்றான் நேசமித்ரன்.

பொருள் : அண்ணே வேலை ரொம்ப அதிகம். அதனால் என்னால் பதிவர் சந்திப்பில் கலந்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றேன். சந்திப்பு இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்.

கடந்த மே மாதம் நடந்த மாதிரி மிகப் பெரிய, உலகம் காணத, இந்த படைப் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற கோஷங்களுடன் நடந்த வலைப் பதிவர் மாநாட்டை இந்த வருடமும் நடத்திவிட வேண்டும் என தம்பி அணிமா ஆசைப் பட்டதால், அதை பற்றி முடிவு செய்வதற்காக இந்த சந்திப்பு என முடிவு செய்யப் பட்டது.

பொருளாதார சிக்கல்கள் எழுந்துள்ளதால், இந்த வருடம் வலைப் பதிவர் அகில உலக மாநாட்டை நடத்துவது பற்றியும், உலக வங்கியில் கடன் வாங்க இயலுமா என்பதுப் பற்றியும் விவாதிப்பதற்காக இந்தப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலை 7 மணியளவில் இந்த சந்திப்பு என ஏகமனதாக ஏற்பாடுச் செய்யப் பட்டு, 7.30 மணியளவில் சந்திப்பு ஆரம்பமானது. (செயலாளர் தன்னுடைய பதிவியின் பந்தாவை காண்பித்துக் கொள்வதற்காக வந்தது லேட்... எப்போதும் போல்..)

பலவிதங்களில் பேசியும், எந்தவிதமான முடிவும் எட்டப் படாததால், தேதி அறிவிக்கப் படாமல் கூட்டம் ஓத்தி வைக்கப்பட்டது.

அப்போது எடுத்தப் படங்கள் உங்கள் பார்வைக்காக..



வலைப் பதிவர் சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்களை வரவேற்கும் நைஜிரியா வலைப்பதிவு சங்க பொதுச் செயலாளர் இராகவன்.



எங்கள் வலைப்பதிவு சந்திப்புக்கு வந்த வாசகர் உயர் திரு. மனோஜ் அவர்கள் புகைப் படத்திற்கு கொடுத்த போஸ்..



சங்க பொதுச் செயலாளருடன் உயர் திரு. மனோஜ்


சங்கத் தலைவர் மற்றும் செயலாளர்



சங்கத் தலைவருடன் வாசகர் உயர் திரு. மனோஜ்



வெல்கம் டிரிங்ஸ் ???


தம்பி நேசமித்திரனுடன் தொலைப் பேசி உரையாடல்.. சங்க விஷயங்களைப் பற்றிப் பேசப் பட்டது.


சங்கத் தலைவர் ...


மோனோ ஆக்டிங் ??? (என்னோட பதவிக்கு யாரும் போட்டி போடமுடியாது.. )


சும்மா போசுக்காக... என்னதுங்க இது? தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க


பொறுப்பி :

1. மேலுல்ல படங்களை எடுத்தது, தம்பி வடலூரான் கலையரசன் வாங்கிக் கொடுத்த புகைப் படக் கருவி. அதற்கு அவருக்கு ஒரு நன்றி. இந்தப் புகைப் பட கருவி வாங்க எங்களுடன் வந்த தம்பி குசும்பன், சாரதி செய்த அண்ணன் சுந்தர் அவர்களுக்கும் நன்றிகள் பல. இந்த மனுஷனுக்கு ஏன் கேமிரா வாங்கி கொடுத்தீங்க என அவர்கள் மேல் யாரும் கோபப் பட்டு விடாதீர்கள். விதி... வேறு வழியில்லாமல் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள்.

2. அனைத்து கிளைச் சங்களுக்கும் சங்கப் பொருளாதார நிலைப் பற்றிய நிதி நிலை அறிக்கை தனி மடலில் அனுப்பப்பட்டுள்ளது.

3. நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதால், அனைத்துச் சங்களுக்கும், தலைமைச் சங்கத்துக்கு அனுப்ப வேண்டிய நிதிகளை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

4. நிதி நிலைமை சீரான பிறகு, மாநாடு நடத்தப் படும் என்பதை மிகத் தாழ்மையுடன் அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.




Saturday, December 12, 2009

அப்பா

அன்று அலுவலக வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது லேட்டாகிவிட்டது. அலுவலகம் இருந்தது வண்டலூரில். வீடு மடிப்பாக்கத்தில். மறுநாள் அனுப்ப வேண்டிய பர்ச்சேஸ் ஆர்டர்களையும், வந்த பில்கள் அனைத்தையும் செக் செய்து, கையெழுத்துப் போட்டு, அசிஸ்டெண்ட் பாலுவிடம் கொடுத்துவிட்டு கிளம்ப நேரம் ஆகிவிட்டது. மணியைப் பார்த்தல் 8. அய்யோ ரொம்ப நேரமாச்சே. அப்பா வேற தூங்காம காத்துகிட்டு இருப்பாரே. என்னச் சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாறு. நீங்க எப்போதும் போல் 8 மணிக்கு படுத்துகுங்க அப்பா, நான் வர லேட்டாகும் அப்படின்னு சொன்னாலும், அலுவலகத்தில் இருந்து வந்து, என்னைப் பார்த்தப் பின்னாடித்தான் அவர் படுத்துக்கப் போகின்றார். 87 வயச்சாச்சு ஏன் இப்படி சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிக்கின்றார் என புரியவில்லை என்று பலவாறக நினைத்தப் படி வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தேன்.

வீடு வந்து சேர மணி 8.40 ஆகிவிட்டது. வீட்டுக்கு வந்தவுடன், ஷுவைக் கழட்டி வைத்துவிட்டு, நேராக அவரைப் போய்த்தான் பார்க்கவேண்டும். போனவுடனே மணியைப் பார்ப்பார். இந்த காலத்தில அப்படி என்னதான் வேலை செய்கின்றீர்களோ புரியவில்லை. 6 மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு 7 மணிக்குள்ளாவது வீட்டுக்கு வரவேண்டாமா என்று சொல்லுவார்.

அன்று அதே மாதிரி, போனவுடனேயே, வாடா குழந்தை ரொம்ப லேட்டாயிடுச்சு இன்னிக்கு அப்படின்னு சொல்லிகிட்டு இருக்கும் போதே, அப்பா பிபி மாத்திரை மத்யாணம் சாப்பிட்டீங்களா அப்படின்னு கேட்டதுக்கு சாப்பிட்டேன், இப்ப இந்த இரண்டு மாத்திரைத்தானே சாப்பிடணும் அப்படின்னு கேட்டார். பெயரைப் பார்த்து இதைத்தான் சாப்பிடணும் அப்படின்னு சொன்ன பிறகு, இன்னிக்கு சப்பாத்தி ஏ கிளாஸ். பர்ஸ்ட் கிளாஸ் டால். நானே நாலுச் சாப்பிட்டேன்னா பார்த்துக்கோ. போ.. போ.. மூஞ்சி கை,கால் அலம்பிட்டு சாப்பிடுன்னு வாஞ்சையாச் சொன்னார்.

மூஞ்சி கை, கால் அலம்பிட்டு வந்து மாத்திரைச் சாப்பிட்டீங்களா கேட்ட போது, நான் சாப்பிட்டாச்சு, போய் முதல்ல சாப்பிடு. மத்யானம் சாப்பிட்டது. நேரத்தோடு சாப்பிட பழகிக்கோ அப்படின்னு சொன்னார்.

எப்போதும் போல் ஈசிச்சேரில் உட்கார்ந்து, முன்னாடி ஒரு சின்ன ஸ்டூலைப் போட்டுகிட்டு, சாப்பிட உட்கார்ந்தா, அப்பா ரூமில் இருந்து டமால்ன்னு ஸ்டூல் விழறச் சத்தம் கேட்டுச்சு. இத்தனைக்கும் அவர் ரூம் முன்னாடித்தான் உட்கார்ந்து இருக்கேன்.

என்னடான்னு பார்த்தா, கட்டிலில் உட்கார்ந்திருவர் அப்படியே ஜன்னலில் சாய்ஞ்சுகிட்டு இருக்கார், கண்கள் மேலே சொருகியிருக்கு. தன்க்கு முன்ண்ட்டை வச்சு இருந்த ஸ்டூலையும், வென்னீர் பாத்திரத்தையும் தட்டி விட்டு இருக்கார். புரை ஏறும் போது இப்படி ஆகும் என நினைச்சுகிட்டு,( முன்னாடி சில சமயம் அது மாதிரி ஆகியிருக்கு) தூக்கி முதுகுல தட்டி கொடுத்தா ... களக் என்று ஒரு சத்தம்... என் மேல் சாய்ந்தார்.. தலை சாய்ந்துவிட்டது... வாயில் இருந்து எச்சில் ஒழுகுகின்றது ...கூப்பிட்டா பதில் இல்லை....

சரி உடனே நங்கநல்லூர் ஹிந்து மிஷின் ஆசுபத்திரிக்கு போன் செய்து ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்குள், விரல்களைத் தொட்டால் ஜில் என்று ஆகிவிட்டது...

அப்பா ... போயிட்டார் .. நன்றாகத் தெரிந்துவிட்டது.. இருந்தும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துப் போய், காண்பித்த போது, அவர் நம்மை விட்டு போய்விட்டார் என மருத்துவர் தெரிவித்தார்.

இன்று அவருக்கு 4 வது திவசம்.... ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதை நினைக்க மனசு வேதனை..

அப்பா எவ்வளவு கத்துக் கொடுத்து இருப்பாய். பாடம் சந்தேகம் கேட்டால் நீயாக பதில் சொல்வதைவிட, நானே கத்துகிறமாதிரி அதை செய்வாயே...

சிக்கனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் வேறுபாடு சொல்லிக் கொடுத்தாயே...

இரண்டு வேஷ்டிகளுக்கு மேல் மூன்றாவது வேஷ்டி இருந்தால் அது லக்சரி என்று சொல்வது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் அதே மாதிரி வாழ்ந்து காட்டீனாயே...

உன்னை நினைத்து தூக்கம் போய்விட்டது..

கொஞ்சம் தூங்கட்டும்மா..

கடைசி வரை உன் மரியாதையை எவ்வளவு நல்லா காப்பாத்தி கொண்டு போனாய். யாருக்கும் பாரமா இருக்க கூடாது, சட்டென போயிடணும் அப்படின்னு சொன்னது மட்டுமல்லாமல், அப்படியே செய்து காட்டினாய்.

இன்றும் என்னால் மறக்க முடியாது, உன்னை பெசண்ட் நகர் எடுத்துச் செல்லும் போது வழியில் இருந்த அத்தனை டிராபிக் போலிஸூம் தொப்பியைக் கழட்டிவிட்டு சல்யூட் அடித்ததை..


பொறுப்பி :

என் அப்பாவை நினைத்து இன்று இரவு உறக்கமே வரவில்லை. அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக இந்த இடுகை.

Sunday, December 6, 2009

படங்கள் - எங்கள் வீட்டுத் தோட்டம்

எங்க வீட்டுத் தேட்டத்தை படம் எடுத்துப் போட்டு இருகேன்.

புகைப் படக் கருவி வாங்கிக் கொடுத்த வடலூரான் கலையரசனுக்கு இந்த படங்கள் சமர்ப்பணம்.



கலர் கலரா குருவியைப் பார்த்தவுடன் கிளிகிட்டேன். தோட்டம் போட ஆரம்பித்தப் போது நிறைய பறவைகள் வந்தன. இப்போதெல்லாம் வருவதேயில்லை. ஏன் என்றுத் தெரியவில்லை.


இப்போதுதான் வளர ஆரம்பித்துள்ள செம்பருத்திச் செடி.


வீட்டு வரவேற்பறையில் இருந்து எடுத்தப் படம்


வேர்கடலை செடி. இந்த படம் வருங்கால சந்ததியனருக்காக. தமிழ் நாடு முழுவதும் வருங்காலத்தில் கான்கிரீட் காடுகளாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


வளர்ந்துவரும் முளைக்கீரை..



பூ பெயர்த் தெரியவில்லை... அழகா இருந்ததா வீட்டில் வச்சு வளர்க்கின்றேன். பெயர் தெரிந்தவர்கள் சொல்லவும்



புதினா - ஒரு சிறிய குச்சிதான் நட்டு வச்சேன். மூன்று மாத்த்தில் இப்படி வளர்ந்திருக்கு.


பாகல் பூ


முதல் பாகல் பிஞ்சு


தோட்டம் வெளியில் இருந்து


சாமந்திபூ



வெண்டை பூ பூப்பதற்கு முன்


வெண்டைப் பூ


வெண்டைக்காய் - எங்கள் தோட்டத்தில் காய்த்த முதல் காய்



எங்க தோட்டத்தில் பூத்த ரோஜா


இனிமேல் தான் மலர வேண்டும்... நாளைக்காலையில் ரொம்ப அழகா இருக்கும்


இதுமாதிரி படங்கள் போடுவதற்கு உந்து சக்தியாக இருந்தது நண்பர் ஞானசேகரன் அவர்களின் கண்டதும் சுட்டதும் வலைப்பூ. அதற்காக அவருக்கு நன்றிகள் பல.

பொறுப்பி :

1. இந்த படங்களில் லைட்டிங் சரியில்லை, அது சரியில்லை என்று யாராவது திட்ட வேண்டுமானால் என்னை மட்டும் திட்டவும். புகைப்பட கருவி வாங்கிக் கொடுத்த கலையரசன் இதற்கு எந்தவிதத்திலும் பொறுப்பேற்க்க மாட்டார்.

2. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுகிட்ட மாதிரி, நானும் நண்பர் ஞானசேகரனைப் பார்த்து படம் போட்டு இருக்கேன். தயவு செய்து யாரும் அவரையும் என்னையும் எந்த விதத்திலும் கம்பேர் செஞ்சுடாதீங்க. அவர் மலை நான் மடு.

3. இந்த படங்களுக்கு கவிதை எழுத ஆசை. போன தடவை கவிதை எழுதி கிடைத்த தனிப்பட்ட மிரட்டல்களால் கவிதை எழுதவில்லை. என் கவிதையை ரசித்த நண்பர்கள் மன்னிக்க. இந்த மிரட்டல் பயத்தில் இருந்து விரைவில் மீண்டு வந்துவிடுவோம் என உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.