ஜூலை 2 & 3 கோவைப் பதிவர்கள் சந்திப்பு.
ஜூலை 2 ஆம் தேதி காலை மதுரையில் இருந்து புறப்பட்டு, கோவையை நோக்கிப் பயணம் ஆரம்பம். எனது ஊர்தியின் ஓட்டுனரைப் பார்த்து கேட்டேன்..
நான் : தம்பி, கோயமுத்தூர் வழி தெரியுமான்னு கேட்டேன்.
ஓட்டுனர் : நல்லாத் தெரியும் சார். என்னா இப்படி கேட்டுட்டீங்க. நான் மதுரைக்காரன் சார்... எல்லா வழியும் நல்லாத் தெரியும்.
இப்படி சொல்லி தம்பி மதுரையை ஒரு இரண்டு சுத்து வந்தார். நானும் ரொம்ப சாதுவாக, தம்பி மீனாட்சி அம்மன் கோயிலை இப்படி எல்லம் சுத்தக்கூடாது... கோயில் உள்ள போய், நடந்துதான் சுத்தணும் அப்படின்னு சொன்னேன். தம்பி படு ஷார்ப். சார் கோச்சுகாதீங்க, அப்படின்னு சொல்லிட்டு, ஒரு ஓரமா வண்டியை நிறுத்திபிட்டு, அங்கன யார் கிட்டயோ, அண்ணே, கோயமுத்தூர் வழி எதுண்ணேன்னு விசாரிச்சுக்கிட்டு இருந்தார். திடீரென லவுட் ஸ்பீக்கரில், டொயோட்டா இன்னோவா 4511 வண்டியை எடுங்க அப்படின்னு. ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சு திரும்பவும் அதே மாதிரி ஒரு லவுட் ஸ்பீக்கரில் ஒரு குரல். நமக்கு சொந்த வண்டியா இருந்தாவண்டி நம்பர் ஞாபகம் இருக்கும். இதுவோ வாடகை வண்டி. ஓட்டுனர் மட்டும் எனக்கு நம்பகமான, 10 வருடங்களுக்கு மேல் பழக்கமான ஓட்டுனர். அவருக்கும் வண்டி நம்பர் ஞாபகம் இல்லை போலிருக்கு. அடுத்து வந்த லவுட் ஸ்பீக்கரில் வந்த குரல், யோவ் வெள்ளச் சட்ட, 4511 பக்கத்துல நிக்கற, வண்டி எடுகங்ய்யா.. ஒருத்தன் இங்க கத்திகிட்டு இருக்கிறது காதுல விழல.. அதுல பாருங்க அன்னிக்கு நானும் வெள்ளைச் சட்டை, ஓட்டுனரும் வெள்ளைச் சட்டை போட்டுகிட்டு இருந்தோம்.
சரி அப்படி, இப்படின்னு வண்டிய எடுத்து, வழி விசாரிச்சுகிட்டு, கிளம்பியாச்சு. சிலர் பொள்ளாச்சி வழி என்றும், சிலர் கொடை ரோடு, ஓட்டன் சத்திரம் வழி என்றும் சொன்னார்கள். இந்த கஷ்டம் எல்லாம் வேண்டாம் என்று, நண்பர் வால்பையனுக்கு தொலைப்பேசி அழைத்து அவரிடம் வழி கேட்க, அவரும் ஒரு வழி சொன்னார். அவரிடமே வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன் அவர்கள் தொலைப்பேசி நம்பர் இரண்டையும் வாங்கிக் கொண்டேன்.
பிறகு ஆரம்பிச்சது, அண்ணன் வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களுக்கு... தொந்திரவு...
அண்ணே, கொடை ரோடு வந்தாச்சு.. இப்ப எந்த ரூட்ல வரணும். அண்ணே ஓட்டன் சத்திரம் வந்தாச்சு இப்ப எந்த ரூட்ல வரணும், வழில வரும் ஊர் பேர் எல்லாம் சொல்லி வழி கேட்டாச்சு. அவரும் வழி சொல்லி, சொல்லி சோர்ந்துப் போயிட்டார். கடைசியில் அண்ணே அலங்கார் கிராண்டேயில் ரூம் போட்டு இருக்கு இப்ப சூலூர் வந்தாச்சு எங்க திரும்பணும் அப்படின்னு கேட்டோம். ராமநாதபுரம் சிக்னலில் வலதுபுறம் என்று சொன்னார். நம்ம ஓட்டுனர் அதை எல்லாம் விட்டு விட்டு நேரா ரயில்வே ஸ்டேஷன் கிட்ட வந்துட்டார். அண்ணனை திரும்பவும் கூப்பிட்டு அண்ணே ரயில்வே ஸ்டேஷன் வந்தாச்சு, இப்ப எங்க திரும்பணும் அப்படின்னு கேட்டேன். அண்ணன், அய்யய்யோ ஏன் ஸ்டேஷனுக்கு வந்தீங்க.. சரி சரி பரவாயில்லை அப்படியே நேரா போங்க, ஒரு மேம்பாலம் வரும். அதுக்கு கீழால போயி ஒரு யூ டர்ன் எடுத்துகிட்டு நேரா போனா சிட்டி டவர் வரும். அதற்கு எதிர்த்தாற் போல் அலங்கார் கிராண்டே இருக்கு என்றார். ஒருவழியா அலங்கார் கிராண்ட் டே வந்து, வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன், சுரேஷ் குமார் அண்ணன், செல்வேந்திரன் அண்ணன் நால்வருக்கும் நாங்க தங்கியிருந்த ரூம் விவரத்தை சொன்னோம். அண்ணன்கள் நாலவரும் மாலை வருவதாக வாக்களித்தப் படி, முதலில்,வேலன் அண்ணாச்சி செல்வேந்திரன் அண்ணன் கூட வந்தார். பின்னர் சஞ்சய் அண்ணன் வந்தார். கடைசியாக சுரேஷ்குமார் அண்ணன் வந்தார்.
பின்னர் நால்வரும் பேச ஆரம்பித்தோம். வடகரை வேலன் அண்ணாச்சி அவர்களின் வியாபர நுணுக்கங்களைப் பற்றியும், அவரது தொழில் பற்றியும் பேச்சு போய்க்கொண்டு இருந்தது. அண்ணன் செல்வேந்திரன் அவரது வேலைப் பற்றியும், அது சம்பந்தமாகவும் உரையாடிக்கொண்டு இருந்தோம்.
அண்ணன் செல்வேந்திரன் அவர்கள் கஸ்டமர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதைப் பற்றி சொன்னார். ஒரு கஸ்டமர் நமது நல்ல சர்வீசை யாராவது இருவரிடம் தான் நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார். ஆனால் அதே கஸ்டமர் நமது மோசமான சர்வீசைப் பற்றி 50 பேரிடம் புகார் தெரிவிப்பார். அதனால் எந்த மாதிரியான கஸ்டமாராக இருந்தாலும் அவரை மதித்து, நல்ல சர்வீஸ் வழங்க வேண்டும். முடியாது என்பதைக்கூட நளினமாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். அருமையான கருத்து. நன்றி செல்வேந்திரன்.
செல்வேந்திரன் அவர்களுக்கு தொலைப்பேசி அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால், அவரால் எங்களுடன் அதிக நேரம் அமர்ந்து பேச இயலாமல் போய்விட்டது.
சஞ்சய் அண்ணன் அவர்கள் கூட பேச ஆரம்பித்தால், நமக்கெல்லாம் சிரித்து சிரித்து வயறு புண்ணாகிவிடும். அப்படி ஒரு பேச்சுத்திறன்.
தம்பி சுரேஷ் குமார்... லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வருவேன் என்று சொல்லுவார். அருமையான தம்பி. என்னைப் பார்க்க வந்துவிட்டு, அவர் பேசிக் கொண்டு இருந்தது என்னவோ, கேமிராவைப் பற்றியும், அதனுடைய டெக்னிகள் டீடெயில் பற்றியும். என்னிடம் கேமிரா பற்றி பேசுவது என்பது, குருடனை ராஜபார்வை பார் என்று சொன்னால் எப்படி இருக்கும். அப்படி இருந்தது.
பின்னர் நாங்க அனைவரும் இரவு உணவுக்காக அங்கே இருந்த உணவகத்திற்குப் போனோம். கவனிப்பு முதலில் சரியாக நடக்கவில்லை. எப்போதும் போல், அவர்களிடம் சற்று கோபமும், கனிவும் கலந்து பேசி, சரி செய்ய வைத்தோம். உணவுத்தரம் நன்றாக இருந்தது.
மிக முக்கியமாக நான் உணவுத் தரத்திற்கு எனக்கு உள்ள அளவு கோல், அடுத்த நாள் என் வயிற்றையோ, உடல் நலத்தையோ பாதிக்காத உணவு நல்ல தரமான உணவு என்பதுதான்.
ஜுலை 3, 2009.
காலை நண்பர் ஒருவரைப் பார்ப்பதற்காக பொள்ளாச்சி போய் வந்தோம். இன்று அரவிந்தனின் பிறந்த நாள். காலையிலேயே நண்பர்கள் பலரும் தொலைப் பேசியில் பேசி அரவிந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மதியம் ஒரு நண்பரை பார்ப்பதற்கு சென்றுவிட்டு ஹோட்டலுக்கு திரும்பினோம். அண்ணன் வால்பையன் அவர்கள் ஈரோட்டில் இருந்து எங்களைப் பார்ப்பதற்காக வந்து கொண்டு இருக்கின்றேன் என்று தொலைப் பேசியில் கூறினார். அண்ணன் சுரேஷும் மாலை 6 மணிக்கு வருவதாகக் கூறினார்.
அண்ணன் வால் பையன் சரியாக 6 மணிக்கு வந்தார். அவருடன் நிறையப் பேசிக் கொண்டு இருந்த போது, அரவிந்திற்கு பர்த்டே கேக் வாங்கிக் கொண்டு அண்ணன் சுரேஷ்குமார் வந்தார்.
சுரேஷ் குமாரும், வால்பையன் அறிமுகம் முடிந்த பின், நெடு நேரம், தனிப்பட்ட முறையில் உறையாடிக் கொண்டு இருந்தோம்.
பின்னர், சுரேஷ் குமார் அவர்கள் வாங்கி வந்து இருந்த கேக்கை வெட்டி, அரவிந்தனின் பிறந்த நாள் அமர்க்களமாகக் கொண்டாடப் பட்டது.
இரவு 8 மணியளவில் நெடுநாள் நண்பர் ஒருவர் குடும்பத்துடன் வருவதாகச் சொல்லியிருந்ததால், வால்பையன் அவர்களுடன் உணவருந்த செல்ல இயலவில்லை. சாரி வால் பையன் அண்ணே.
புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு
வடகரை வேலன் அண்ணாச்சி, சஞ்சய் அண்ணன்
சஞ்சய் அண்ணனும், நானும்.
வடகரை வேலன் அண்ணாச்சி
அரவிந்த் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்க்காக சுரேஷ் குமார் அண்ணன் வாங்கிவந்த கேக்
அண்ணன் சுரேஷ்குமார், அண்ணன் வால்ஸ் & me
ஜூலை 4 அன்று அங்கிருந்து கிளம்பி குன்னூர் போய்விட்டு ஜூலை 6 ம் தேதி அன்று திருப்பூரில் பதிவர்களுடன் லஞ்ச் ஆன் மீட்டிங்.... இது பற்றி விவரமாம அடுத்தப் இடுகையில்..
அது வரை ... தொடரும்
படங்கள் உதவி - அண்ணன் சுரேஷ் குமார்...
என்னோட காமிராவில் படங்கள் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எழவேயில்லை. அதனால் படங்கள் கொடுத்து உதவிய அண்ணன் சுரேஷ் குமாருக்கு நன்றிகள் பல.