எனக்கு வந்த மாதிரி யாருக்குமே வரக்கூடாதுங்க... என்ன செய்வது வந்துடுச்சு.. நாமதானே அனுபவிக்கணும்... என்னாச்சுன்னு கேட்கறீங்களா... படிச்சுப் பாருங்க புரியும் உங்களுக்கே...
அக்டோபர் மாசத்தில ஆரம்பிச்சுதுங்க... பயங்கர ஜலதோஷம்... சென்னைத் செந்தமிழில் சொல்லணும் என்றால், சரியான ஜல்ப்பு பிடிச்சுகிச்சு நைனா.
நானும் மருத்துவர்கிட்ட போகாம நமக்கு தெரிஞ்ச மாத்திரை எல்லாம் உபயோகப் படுத்திப் பார்த்தேன். சில நண்பர்களுக்குடன் பேசும் போது, அண்ணே நல்ல பிராண்டி வாங்கி மிளகு போட்டு அடிச்சுப் பாருங்க சரியாகிடும் என்ற யோசனை வேறு சொன்னார்கள். நம்ம உடம்பு பத்தி நல்லாத் தெரியும் என்பதால் அதை முயற்சி செய்யவில்லை.
இப்படி ஒரு 15 நாள் ஓட்டிட்டேன். இதுக்கு மேலே போச்சுன்னா ரொம்ப கஷ்டம் அப்படின்னுட்டு, இங்கு ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தேன். அய்யா 15 நாளா ஜலதோஷம் பிடிச்சுக்கினு ரொம்ப படுத்துது. மூக்கு அடைச்சுக்கினு மூச்சு விட சிரமமா இருக்குது, மூக்கிலே இருந்து தண்ணியா கொட்டுது, இருமல் வேற ஜாஸ்தியா இருக்குன்னு சொன்னேன்.
அதுக்கென்னங்க நிறுத்திடலாம் அப்படின்னு சொன்னாரு. (ஜலதோஷத்தை என்றுதான் அர்த்தம் பண்ணிக்கணும்... மூச்சு விடறத இல்ல).
நான் அவர்கிட்ட அய்யா நமக்கு பென்சிலின், சல்பர் டிரக்ஸ், கொனைய்ன் (அப்படித்தான் நான் படிச்சேன்... மருத்துவர்கள் மன்னிக்க தப்பா இருந்தால்) இதெல்லாம் நமக்கு அலர்ஜி. உடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொன்னேன். சரி அப்படின்னுட்டு மாத்திரை கொடுத்தாரு.
மாத்திரை எல்லாம் சாப்பாடு சாப்பிட்டபின் சாப்பிடுங்கன்னு சொன்னாரு. நானும் சரின்னு சொல்லிட்டு, மதிய உணவுக்கு பின் சாப்பிட்டேன். அதுல பாருங்க ஒரு மாத்திரை (பேர் தெரியலை) நமக்கு அலர்ஜியாடுச்சுப் போல் இருக்கு. இரண்டு மணி நேரத்தில் உதடு தடிச்சு போச்சு, கையில் நாலஞ்சு இடத்தில் ஒரு மச்சம் மாதிரி வந்திடுச்சு. அய்யய்யோ என்னாடா இது வம்பு அப்படின்னு திரும்பவும் டாக்டரிடம் ஓடினேன். அவர் பார்த்துட்டு அய்யய்யோ அப்படின்னுட்டு, அவர் கொடுத்த மாத்திரையில் இருந்து ஒரு மாத்திரையை எடுத்துட்டு, வேற மாத்திரை கொடுத்தாரு. மேலும் அலர்ஜி சரியாவதற்கு மாத்திரைக் கொடுத்தார்.
அவர் அலர்ஜிக்கும், ஜலதோஷத்துக்கும் கொடுத்த மாத்திரையில் அலர்ஜியும், ஜலதோஷமும் சரியாச்சு. ஆனால் வயத்து வலியில் கொண்டு விட்டுடுச்சு. எதைச் சாப்பிட்டாலும் உடனே வயத்து வலி, வயத்துல ஒரு எரிச்சல் தாங்க முடியல.
என்னடாது வம்பாப் போச்சேன்னு, திரும்பவும் டாக்டரிடம் போனேன். அவர் இது மாத்திரை நிறையச் சாப்பிட்டதால் அல்சர் ஆயிருக்கு. அத சரி பண்ண மாத்திரை கொடுக்கின்றேன் என்றுக் கொடுத்தார்.
அந்த மாத்திரைச் சாப்பிட்டா, அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பயங்கர தலைவலி, தலைச் சுத்தல் தாங்க முடியல. கொடுமையடா சரவணா இதெல்லாம் நமக்குச் சரி வராது. இந்த வயத்து வலியை முதல்ல கட்டுப் படுத்தணும். அதுக்கு ஒரே வழி நம்ம சாப்பாட்டில் காரம் இல்லாமல், சாப்பிடுவது என்று முடிவு செய்து 10 நாளைக்கு வெறும் மோர் சாதம், ப்ரெட் இப்படி சாப்பிட்டு, ஊரில் இருந்து கொண்டுவந்த பாண்டாசிட் மாத்திரையைய்ப் போட்டு கிட்டு ஒரு மாதிரி இப்பத்தான் சரியாயிருக்கு.
தலைவலி போய் திருகு வலி வந்தமாதிரின்னு சொல்லுவாங்க கேள்விப் பட்டு இருக்கேன். ஆனா இப்பத்தான் அனுபவச்சேன்.
இதெல்லாம் விட கொடுமை என்னன்னா நம்ம தம்பி நவாஸ் கூட சாட்டில் பேசும் போது அவரை கலாய்ச்சதுதான். நீங்களே படிச்சுப் பாருங்களேன்... தம்பி பயங்கர டென்ஷன் ஆயிட்டாரு...
நவாஸ் : அண்ணே எப்படி இருக்கீங்க
நான் : என் நிலைமை எப்படி இருக்குத் தெரியுமா
ஜலதோஷம் வந்து மூக்கு அடைச்சு கிச்சு
சரி என்று டாக்டரிடம் போய் மருந்து வாங்கி சாப்பிட்டால்
அது அலர்ஜியா ஆயிடுச்சு
திரும்பவும் டாக்டரிடம் ஓடினா அவர் பயந்து போய்
அலர்ஜிக்கு மருந்து கொடுத்தா
அது வயத்து வலியில் கொண்டு விட்டுவிட்டது
சரின்னு இப்ப அதுக்கு மருந்து சாப்பிட்டா
அது தலைவலியில் கொண்டு விடுது
நவாஸ் : ஹா ஹா ஹா ஹா.
நான் : என்ன பண்றதுன்னு நீங்க சொல்லுங்க பார்க்கலாம், உண்மைங்க இது
நவாஸ் : நம்ம டாக்டர் தேவன்மாயம் கிட்டா போனீங்களா
நான் : அய்யா நான் இருப்பது நைஜிரியா, அவர் இருப்பது காரைக் குடி இந்தியாவில்
நவாஸ் : என்னண்ணா இது சின்னப்புள்ளைங்க உடம்பு மாதிரி ஆயிடுச்சு உங்களுக்கு. அப்போ கைமருந்துதான் சரிவரும் உங்களுக்கு
நான் : எல்லா மருந்துகளையும் கைல எடுத்து சாப்பிடுகின்றேன்
நவாஸ் : அதாவது நாட்டுமருந்து
நான் : எந்த நாட்டு மருந்து அப்படின்னு சொல்லுங்க
நவாஸ் : அண்ணாஆஆஅ, பாட்டிவைத்தியம்
நான் : எங்க பாட்டி எப்பவோ செத்துப் போயிட்டாங்களே
நவாஸ் : அய்யய்ய்யோஓஒ யாராவது வாங்களேன்
நான் : எதுக்கு. அன்ண்னனுக்கு வைத்தியம் பார்க்கவா
நவாஸ் : எங்க அண்ணனுக்கு மருந்து கொடுக்கத்தான்
நான் : அது சரி. தாங்க முடியலடா சாமின்னு அங்க கத்துவது இங்கு கேட்குது
நவாஸ் : ஹா ஹா ஹா ஹா. இப்போ எப்படி இருக்கு உடம்பு. தலைவலிக்கு கடைசியா மருந்து சாப்ட்டீங்களா
நான் : இல்ல சாப்பிடவில்லை. வயத்து வலிக்கு மட்டும் கொஞ்சமா மருந்து
நவாஸ் : அதுக்கு புதுசா வர வேற எது வலி இருக்குறமதிரி தெரியலை. அதான் எல்ல வலியும் வந்திடுச்சே
ஆனா பாருங்க அன்னிக்கு இப்படி பாதியிலேயே கட் பண்ணிட்டுப் போனவருத்தான் இன்னி வரைக்கு சாட் பக்கமே வரவில்லை. நான் எதாவது தப்பா பேசிட்டேனாங்க... அவருக்கு என் மேல் என்ன கோபம் அப்படின்னு யாராவது கேட்டுச் சொல்லுங்களேன்.