Monday, May 25, 2009

நைஜீரியா வலைப் பதிவர் சங்க வருடாந்திர மாநாடு அழைப்பிதழ்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

உலகின் மிகப் பெரிய நைஜிரியா வலைப் பதிவர் சங்க மாநாடு (Regn. No. 00001/002/xabc/2007), அதன் தலைவர், மற்றும் பொதுச் செயலாளரால் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


மாநாடு விவரங்கள்

நாள் : 30-05-2009
நேரம் : மாலை 4.00 மணி முதல் 8.00 வரை
இடம் : அபுஜா


கீழ்க்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்க்காக மாநாடு கூட்டப் படுகின்றது.

1. சங்க உறுப்பினர் சந்தாத் தொகையை உயர்த்தலாமா (அ) தற்போதுள்ள நிலையிலேயே தொடரலாமா... (தற்போது வருடத்திற்கு US$ 100 ஆக உள்ள சந்தாத் தொகையை US$ 100 ஆக உயர்த்தலாம் என முடிவு செய்யக்கூடாது்)

2. சங்க உறுப்பினர்த் தொகையைச் செலுத்தாத உறுப்பினர்களை உடனே சந்தாத் தொகையை செலுத்த வேண்டுகோள் விடுத்தல்.

3. சங்க தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்று செயல் வீரர்களைத் தேர்ந்தெடுத்தல். (இப்போதுள்ள தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்கள் மறுபடியும் தேர்தலில் போட்டியிடலாம் என்று சங்கத்தின் விதி் எண் 15(அ(i)) அனுமதிக்கின்றது. மேலும் ஒருவரே இரண்டு பதவிகளில் இருப்பதும் சங்கத்தின் விதி 99(ஓ(iii)) அனுமதிக்கின்றது)

4. சங்கத்திற்க்காக தனிக் கட்டிடம் கட்டுவதற்கான நிதி திரட்டுவது சம்பந்தமாக.

5. வருடாந்திர கணக்கு, வழக்குகளை சமர்பித்தல். (இதுவரை எந்த சந்தாவும் வசூலாகவில்லை என்பதை இங்கு தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டு இருக்கின்றோம்)

6. தலைவர், பொதுச் செயலார், பொருளாளர்களுக்கு சந்தாத் தொகையில் இருந்து விலக்கு அளிக்கும் தீர்மானம். இது முக்கிய தீர்மானம் என்பதில் எந்த உறுப்பினறுக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

7. நைஜிரியா பதிவர் சங்கம் என்று இருக்கும் பெயரை அகில உலக நைஜிரியா பதிவர் சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகின்றது.

உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியாக அழைப்பிதழ் அனுப்பப் பட்டுள்ளது. கிடைக்கப் பெறாதவர்கள் இந்த அழைப்பையே தங்களின் தனிப்பட்ட அழைப்பாக ஏற்று மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

இப்படிக்கு தங்கள் வரவை அன்புடன் எதிர்ப்பார்க்கும்



அணிமா
தலைவர்
+234 54321 54321


இராகவன்
பொதுச் செயலாளர்
+234 12345 12345


அணிமா & இராகவன்
பொருளாளர்கள்
(இரண்டு பொருளார்கள் - சங்கம் நேர்மையானது என்பதற்கான சாட்சி இது)


டிஸ்கி :
(முதலில் பி.கு. என்றுதான் போடலாம் என்று நினைத்தோம் - வலையுலக தர்மம் அதற்கு ஒத்துக் கொள்ளாததால் டிஸ்கி எனப் போடப்பட்டுள்ளது)


அ) இதுவரை இரண்டு பேர்தான் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். (அணிமா & இராகவன்) சேராத அனைவரும் உடனடியாக உறுப்பினர்களாக சேர்ந்து பயனடையுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப் படுகின்றார்கள்.

ஆ) மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் அழைத்து நாங்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்கு சங்கம் பொறுப்பல்ல. தலைவரும், பொதுச் செயளாளரும் பொறுப்பல்ல என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். (அலுவலகப் பணிச் சுமைக்காரணமாக தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றார்கள்).

இ) தேவையான சிற்றுண்டி, காபி, தேனீர் வசதிகளுக்கு, ஸ்பான்சர்கள் வரவேற்க்கப் படுகின்றார்கள்.

ஈ) முதலில் சேரும் உறுப்பினர்களுக்கு சங்கத்தில் பொறுப்புகள் அளிக்கப்படும் என்பதை தெரிவிக்க கடைமைப் பட்டுள்ளோம். இந்த பொன்னான வாய்ப்பை நழுவவிடாமல் உடனடியாக சங்கத்தில் உறுப்பினர்களாக சேருமாறு வலைப்பதிவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். சேரும் உறுப்பினர்கள் முதலில் சந்தாத் தொகையைச் செலுத்திய பின்னர் தான் பொறுப்புகள் அளிக்கப்படும் என்பதை மிக மிக தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

உ) நைஜிரியா வலைப் பதிவர் சங்கத்தில் சேருவதற்கு, நீங்கள் நைஜிரியாவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. அகில உலக நைஜிரியா வலைப்பதிவர் சங்கம் என்று பெயர் மாற்றப் பட இருப்பதால், உலகத்தில் நீங்க எங்கு இருந்தாலும் இங்கு தாங்கள் உறுப்பினர் ஆக முடியும்.


ஓப்பம்
முன்னாள், இன்னாள் மற்றும் வருங்கால பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்.


Saturday, May 23, 2009

கேள்வியும் பதிலும்....

இது ஒரு சங்கிலித் தொடர் இடுகை.... (அப்படின்னு சொல்றாங்க)

ஸ்டார்டிங் பாயிண்ட் நிலாவும் அம்மாவும். (எப்படிதான் இது மாதிரி எல்லா தோணுமோன்னு புரியலை... பாவம் நிலா)

அவரின் சங்கிலித் தொடர்கள்....

ரவீ.

அத்திரி.

கடையம் ஆனந்த்.

ஹேமா.

கார்த்திகைப் பாண்டியன்.

குமரை நிலாவன்.

சிந்துகா.

தேவா.

வேத்தியன்

என் உயிரே... அபு...

துபாயில உட்கார்ந்துகிட்டு என்னை மாட்டிவிட்டுட்டாரு....

இதைத் தொடர்ந்து அழைத்தவர் பிரியமுடன் ...வசந்த்... கத்தாரில் உட்கார்ந்துகிட்டு மாட்டிவிட்டவர்...

முதலில் ராகவன் என்பது யார்...? இதுக்கு பதில்.... ????? !!!!

பிள்ளைக்கு தகப்பனா, தகப்பனுக்கு பிள்ளையா, தாய்க்கு மகனா, மனைவிக்கு கணவனா, மச்சானா, மாமனா இப்படி பல கேள்விகள் தோணுது.. .

சரி இப்ப புலம்பி என்னா செய்வது....

இந்த இடுகையைத் தொடர்வது என்று முடிவு செய்தாச்சு.. (மாட்டேன் சொன்னா தம்பிகள் கிட்ட அடிவாங்க முடியாதில்லையா... அதனால் (ஆ)ரம்பம் சங்கிலித் தொடர் இடுகை....)

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

அப்பா, அம்மா வச்ச பேரு. பேருல என்ன இருக்கு பிடிப்பதற்கும், பிடிக்காமல் போவதற்கும். அது ஒரு அடையாளம்தான். இத தவிர நண்பர்கள் வச்ச பட்ட பெயர்கள் நிறைய உண்டு. அது எல்லாம் சொல்லப்பிடாது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

தாயையும்(27-01-2005) , தந்தையும் (26-11-2005) மறைந்த போது.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும். நெஜமாவே நல்லா இருக்குங்க.

4.பிடித்த மதிய உணவு என்ன?

என் அம்மா சமைத்த, மனைவி் சமைக்கும் எல்லா உணவுகளும் எனக்குப் பிடிக்கும். இதுதான் வேண்டும் என்பது கிடையாது. தயிர்சாதம், ஊறுகாய் கூட போதுமானதுதான்.

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

எல்லோரிடமும் நட்பாகத்தான் இருக்க நினைப்பேன். நன்கும் பழகுவேன். தொடர்வது காலத்தின் கையில்...

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

இரண்டும் இல்லீங்க. எனக்கு நதியில் நீந்தி குளிக்கத்தாங்க ரொம்ப பிடிக்கும். கும்பகோணத்தில் காவிரி ஆற்றுக்கு பக்கத்தில் இருந்ததால் அந்த ஆசை.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

யாரையுமே அவர்கள் கண்களைப் பார்த்துதான் பேசப் பிடிக்கும்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விசயம் அப்படின்னு சொல்லுனும் என்றால்...தெரியலை.

பிடிக்காத விசயம்.... கோபம்... மூக்கின் மேலே இருக்கும் கோபம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது - எல்லாமே.... பிடிக்காதது - அப்படி எதுவும் கிடையாதுங்க.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

இது வரை அது மாதிரி வருந்தியது இல்லீங்க. நடப்பவை எல்லாம் நல்லதற்கே என்று இருப்பவன் நான்.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெள்ளை வேட்டி, பனியன்... (வீட்டில் இருந்து எழுதுகின்றேன்..)

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய முடியாதுங்க... ஒரு வேலைச் செய்யவே இங்கு மூச்சு வாங்குதுங்க...

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீல வர்ணமாக மாற ஆசை.

14.பிடித்த மணம்?

சந்தனம், ஒல்ட் ஸ்பைஸ் மஸ்க் ஆப்டர் ஷேவ் லோஷன் மணம்.

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

1. என்ன பாசம்தான் காரணம். தங்கச்சியாச்சே... அப்புறம் அவரின் எழுத்துத் திறமை. நேசம் காட்டும் பண்பு... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்.

2. திறைமையான தம்பி. புதிதாக பதிவராக வந்தாலும், எல்லா பதிவுகளையும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருக்கின்றது. நான் எப்ப சாட்டிங்கில் வருவேன் என்று காத்துக் கொண்டு இருக்கும் அன்புத் தம்பி.

3. தைரியமாக எழுதும் பதிவர். எல்லாவற்றுக்கும் மேலாக என்னை அவருக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கும் என்பதாலும்....

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

அபுஅஃப்ஸர்... என் உயிரே...

தம்பி ஜமாலால் அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர். கவிதையாகட்டும், கட்டுரையாகட்டும், கதை சொல்வதாகட்டும், பின்னூட்டம் போடுவதாகட்டும் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும். எதை சொல்ல, எதை சொல்லாமல் இருக்க. நல்லவர், வல்லவர் எல்லாவற்றிக்கும் மேலாக அன்புத் தம்பி. எல்லாவற்றிற்கும் மின்னரட்டையில் என்னோட கடிகளை தாங்கிக் கொண்டு அன்பாக அண்ணே என்றழைக்கும் பாங்கு...

பிரியமுடன்...வசந்த்

சூப்பர் கடி மன்னர். எப்படி எல்லாம் யோசிக்கின்றார். 2008 -ல் 1 பதிவு போட்டவர், 2009 மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 69 பதிவுகள் போட்டு சிலிர்க்க வைத்தவர். மனம் விட்டு சிரிக்க இவரது பதிவுகளைப் படியுங்க.

17. பிடித்த விளையாட்டு?

கிட்டிபுல், கோலி, பம்பரம், பச்ச குதிரை, கோகோ, கபடி, பேய்ப் பந்து..... இப்படி நிறைய

18.கண்ணாடி அணிபவரா?

ஆச்சு அது போட்டு ஒரு 30 வருஷமாச்சு..

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

காம நெடி இல்லாத காமடி படங்களை ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

மைக்கேல் மதன் காமராஜன்.... (டிவிடியில் பார்த்தது)

திரையரங்கில் கடைசியாகப் பார்த்த படம் - சிவாஜி

21.பிடித்த பருவ காலம் எது?

மழைக்காலம்..... மழை பெய்வதைப் பார்க்க ரொம்ப பிடிக்கும்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

புத்தகம் படிப்பதற்கு இங்கு தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அதனால் இணையத்தில் படிப்பதுடன் சரி. ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாதுங்க.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

அது எல்லாம் மகன் செய்வது. நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

விடியற் காலையில் ஒலிக்கும் பறவைகளின் சத்தம், குழந்தைகளின் மழலை, சிரிப்பு.

வாகனங்களின் ஏர் ஹார்ன் சத்தம், ஆட்டோ சத்தம், சைலன்சரை கழட்டி விட்டுட்டு வண்டி ஓட்டுபவர்களைக் கண்டாம் பயங்கர கோபம் வரும்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

நைஜிரியாதான் அதிக தூரம் .

இதற்கு முன் சைனாதான் அதிக பட்ச தொலைவு சென்ற இடம்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித் திறமையா... அப்படின்னா என்னங்க

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கைத் துரோகம், திருட்டு

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோவம்தான்....

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இந்தியாவில் எல்லா இடமும் பிடிக்கும். சென்னையில் இருந்த வரை நான் அடிக்கடி போகும் இடம் புதுச்சேரி ஆரோவில். இதுத்தவிர டாப்ஸ்லிப், குன்னூர், கோடைக்கானல் ... இப்படி நிறைய இடம் சொல்லலாம்.

வெளிநாட்டில் சுற்றிப் பார்க்க ஆசை எல்லாம் கிடையாதுங்க. நம் நாட்டை சுற்றிப்பார்க்கவே இந்த ஆயுசு போதாதுங்க...

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

மற்றவர்களுக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை, உபத்திரவமா இருக்க கூடாதுன்னு நினைக்கின்றேன்.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

அப்படி எல்லாம் ஒரு நினைப்பே கிடையாதுங்க.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும். இன்பமும், துன்பமும், சந்தோஷமும், கஷ்டமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. ஓவ்வொருவருக்கும் ஒரு கஷ்டம். நம் கஷ்டத்தை அடுத்தவர்கள் மேல் திணிக்காமல் மற்றவர்களுக்கு நம்மால முடிந்த உதவிகளை செய்து வாழ வேண்டும்.

இதே கேள்விகளுக்கு தங்களுடைய பதிலை சொல்வதற்கு

1. தங்கச்சி ரம்யா Will to Live

2. தம்பி சுரேஷ் எழுதுவது எல்லாம் எழுதல்ல....

3. டக்ளஸ்

எதோ என்னால முடிஞ்சது மாட்டிவிட்டாச்சு. தொடருங்கப்பா...

Monday, May 18, 2009

என்னைத் திருடியவர்....






மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதயரவர்கள்...

தம்பி டக்ளஸ் என்னையும் மதித்து இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு என்னை அழைத்து இருக்கின்றார். தம்பி டக்ளஸ் நேதாஜி பற்றிய இடுகையைக் காண இங்கு சொடுக்கவும்.

முன்னமே என்னைக் கவர்ந்தவர்கள் என்று ஒரு இடுகை எழுதியிருக்கின்றேன். தம்பி டக்ளஸ் அழைப்பை ஏற்று இந்த சங்கிலி இடுகையைத் தொடருகின்றேன்.

மனதிற்குள் ஒரு சிறு பயமும் உண்டு. இந்த இடுகையை எந்தவிதமான தப்புகளும் இல்லாமல் எழுதவேண்டுமே, அதிலும் தமிழ் தாத்தா அவர்களைப் பற்றிய இடுகை என்பதால், மிகக் கவனமாக எழுத முயற்சித்துள்ளேன். தப்புகள் இருந்தால் தமிழ்த் தாத்தா மன்னிப்பாராக.

அனைவராலும் தமிழ்த் தாத்தா என்று அன்புடன் அழைக்கப் படும் டாக்டர் உ.வே. சா அவர்கள் பிறந்தது 19 - 02 -1855. உத்தமதானபுரம் வேங்கட சுப்பையர் சாமிநாதய்யர் என்பதின் சுருக்கமே உ.வே.சா.

தந்தையார் திரு. வேங்கட சுப்பையர் - தாயார் திருமதி சரஸ்வதியம்மாள்.

பலரிடம் பல பாடங்கள் கேட்டபின், திருவாடுதுறை ஆதினத்தின் பெருங் கவிஞரவாகவும் சிறந்த புலவராகவும் விளங்கிய மகா வித்வான் திரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 6 வருடங்கள் பாடங்கள் படித்தார் தமிழ்த் தாத்தா அவர்கள். (1870 முதல் 1876 வரை). மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் 1876 - ல் மறைந்தைதால் அவரிடம் மேலும் பாடம் படிக்க இயலாமல் போய்விட்டது.

பிள்ளை அவர்கள் மறைவிற்குப் பின் தமிழ்த் தாத்தா திருவாடுதுறை ஆதினகர்த்தர் ஸ்ரீ சுப்ரமணிய தேசிகர் அவர்களிடத்தில் பாடம் கேட்க ஆரம்பித்தார். அதோடு மற்ற பிள்ளைகளுக்கு பாடம் சொல்லும் பணியினை மேற்க் கொண்டார்.

கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரியில் தமிழாசிரியாக இருந்த திரு. தியாகராசச் செட்டியார் அவர்கள் ஓய்வு பெரும் காலம் வந்த போது, அவரின் சிபாரிசின் காரணமாக ஐயரவர்களை தமிழாசிரியாராக வேலை 1880 ஆம் ஆண்டு முதல் வேலைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

கல்லூரியில் வேலைப் பார்த்த காலத்தில் தமிழ்த்தாத்தா அவர்களுக்கு கிடைத்த நட்பு, கும்பகோணம் ஜில்லா முன்சீப் திரு. சேலம் இராமசாமி முதலியார் அவர்கள். அவர்கள் மூலம் அவருக்கு கிடைத்த நூல் தான் சீவக சிந்தாமணி. இராமசாமி முதலியார் அவர்கள் தமிழ்த் தாத்தா அவர்களிடம் சீவக சிந்தாமணி பாடம் சொல்லிக் கொடுக்க சொல்லியுள்ளார்கள். அதனை பாடம் எடுக்கும் போது அன்னாருக்கு பல சந்தேகங்கள் ஏற்பட அதை அவர் ஜைன மத நண்பர்கள் மூலம் கற்றறிந்து, அவருக்கு விளக்கினார்.

தமிழ் தாத்தா அவர்கள் விடாப்பிடியாக முயன்று, 1887 - ல் சீவக சிந்தாமணியை அச்சில் வெளியிட்டார்.

தமிழ்த்தாத்தா அவர்கள் முயற்ச்சியினால் அச்சில் கொண்டு வரப் பெற்ற மற்ற நூல்கள் பத்துப்பாட்டு (1889) , சிலப்பதிகாரம் (1892), புறநானுறு(1894), மணிமேகலை(1898) என்று இந்த எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்லுகின்றது.

கும்பகோணம் கல்லூரியில் இருந்து 1903 ஆம் ஆண்டு சென்னை கல்லூரிக்கு தமிழாசிரியாராக சேர்ந்தார்கள் தமிழ்த் தாத்தா அவர்கள்.

தமிழ்த் தாத்தா அவர்கள் செய்தது மிகப் பெரியத் தொண்டு. ஏட்டில் இருந்து பிரதி எடுத்து, அதை அப்படியே அச்சிடும் வேலை அல்ல ஐயரவர்கள் செய்தது. ஏட்டில் உள்ள் பாடம் பிழைப் பட்டு இருக்கும். இன்னதென்று ஊகிக்க முடியாத சிதைவுகள் ஏற்பட்டு இருக்கும். அதை சரி செய்து வெளியிடுவது என்பது மிகப் பெரிய விசயம். தமிழ்த் தாத்தா அவர்கள் செய்தது இதுதான்.

தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம், தமிழர் மரபு என்று பலவாறு பேசிக் கொண்டு இருக்கின்றோம். தமிழ் இந்திய மொழிகளில் மிகப் பழமையானது என்று இன்று நாம் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். இந்த உயர்வுக்கு காரணம் தமிழ்த்தாத்தா அவர்களின் அயராத தொண்டும், உழைப்பும் தான் காரணம்.



தமிழ்த்தாத்தா அவர்கள் பெற்ற பட்டங்கள்
தமிழுக்கும் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பினை பாராட்டி உ.வே.சா. அவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் சிறப்பு முனைவர் பட்டம் மார்ச் 21, 1932 அன்று அளித்தது.

இது தவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு பெப்ரவரி 18,2006ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் முத்திரை வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தாத்தா அவர்களின் புகழ் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம். எழுத எழுத விசயங்கள் ஏராளாமாக உண்டு.

இவரின் பெருமையை திரு ராகவையங்கார் அவர்கள் செய்யுளாகவே கொடுத்துள்ளார்.

ஏடு தேடி யலைந்தவூ ரெத்தனை
எழுதி யாய்ந்த குறிப்புறை யெத்தனை
பாடு பட்ட பதத்தெளி வெத்தனை
பன்னெ றிக்கட் பொருட்டுணி வெத்தனை
நாடு மச்சிற் பதிப்பிக்குங் கூலிக்கு
நாளும் விற்றபல் பண்டங்க ளெத்தனை
கூட நோக்கினர்க் காற்றின வெத்தனை
கோதி லாச் சாமி நாதன் யமிழ்க் கென்றே!

தமிழ்த் தாத்தா அவர்கள் 28.04.1942 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார்.

தமிழ்த் தாத்தா அவர்கள் தமிழுக்கு செய்த தொண்டு, தமிழ் உள்ளவரை தமிழ் கூறும் நல்லுலகம் மறக்க முடியாதது.


இந்த சங்கிலித் தொடர் இடுகையை அன்பு நண்பர் திரு ஜீவன் அவர்களை தொடரும் படி அழைக்கின்றேன்.

நன்றி : தமிழ்த்தாத்தா அவர்களின் என் சரித்திரம்

Tuesday, May 5, 2009

அன்பு... பாசம்... நேசம்...

நட்பு .....




உறவு...



பாசம்....




நேசம்...




அன்பு... இந்த வார்த்தைக்கு தான் எவ்வளவு வலிமை




அன்பு என்ற வார்த்தை எவ்வளவு தருகின்றது..

அன்பு செலுத்துங்கள்... நீங்கள் கொடுத்ததை போல் பல மடங்கு பெறுவீர்கள்..

கொடுக்கப்பட்டது எதுவும் திரும்பி வரும்...

கொடுப்பதில் இன்பம் காணும் ஒரே விசயம் அன்புதான்...

டிஸ்கி : என் நண்பர் திரு. ரமேஷ் அவர்களுக்கு நன்றி.